சீர்காழி: சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை அண்ணாமலைநகர் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராகுல் (17). முத்தையா பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலை விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ராகுலின் உடலை அனுப்பி வைத்தனர்.
ராகுல் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினால் மட்டுமே, மாணவரின் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.