தென் தமிழகம், அதை யொட்டிய குமரிக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி , கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக கனமழையும், சில இடங்களில் பரவலாகவும் மழையும் பெய்து வருகிறது. சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, விமான நிலையம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை கனமழை பெய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் திருவள்ளூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், ஈரோடு, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகளை பொதுமக்கள் இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு கொடைக்கானல் கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் மழையால் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து வரும் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.