தீபாவளிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாள் விழா சமூக விழிப்புணர்வு பாத யாத்திரையில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தீபாவளிக்கு ஏறத்தாழ ரூ. 585 கோடிக்கு மது விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. இதை எந்த அரசாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு முழுவதும் தீபாவளியை மதுவற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டும் என்பது எனது கருத்து. எந்த வீட்டிலும் எவ்வித பிரச்னையும் இருக்கக்கூடாது. மது மதிமயக்கத்தைக் கொடுக்கிறது. சம்பாதிக்கும் பணத்தை அழிக்கக்கூடிய ஒரு நாசக்கார சக்தியாக மது இருக்கிறது. எனவே, மதுவில்லாத தீபாவளியாக, மது அருந்தாத தீபாவளியாக இந்த தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்.
தமிழகத்தை மதுவற்ற மாநிலமாகவும், மது அருந்தாத தமிழனாகவும் காண வேண்டும் என விரும்புகிறேன். இதன் முதல் தொடக்கமாக, காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் வரும் தீபாவளியன்று எக்காரணத்தைக் கொண்டும் மதுவைத் தொடாமல், நண்பர்களுடன், உறவினர்களுடன் குதூகலமாக இருக்க வேண்டும். தீபாவளியன்று மது பழக்கம் மறையட்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மது குடித்தால் தீபாவளியைக் கொண்டாட முடியாது. அதனால் மகிழ்ச்சியும் இல்லை. மதுவால் எத்தனையோ குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கின்றன. இது மிக மோசமான செயல். எக்காரணத்தைக் கொண்டும் தீபாவளிநாளன்றும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. தீபாவளி நாளில் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையன்றும், இஸ்லாமியர்களின் பெருவிழாக்களின்போதும் மதுக் குடிக்கக் கூடாது என்றார் ராதாகிருஷ்ணன்.
முன்னதாக, கீழவாசல் காமராஜர் சிலை அருகில் தொடங்கிய இந்த பாத யாத்திரை மாநகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ரயிலடியில் முடிவடைந்தது.
இதில், பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், செயலர் புரட்சி கவிதாசன், தொழிற் பிரிவுத் தலைவர் பாண்டிதுரை, தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.