ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அறிவித்துள்ள உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுபவச் சான்று, வருகைப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஆவணங்களைத் தர மறுக்கும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் களுக்கு பணி அனுபவச் சான்று, வருகைப் பதிவேடு நகல், ஊதியப் பட்டியல் நகல் போன்ற ஆவணங்களை அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகள் தர மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதுபோன்று தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆவணங்களைத் தர மறுப்பது அரசு வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, அரசு வகுத்துள்ள ஒழுங்காற்றுச் சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்.
எனவே, எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காமல் தேவையான ஆவணங்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குமாறு தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அறிவுறுத்தப்படுகின்றன.
தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தவறான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை யெனில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.