திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.
டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, திமுகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நிலவேம்பு கஷாயம் வழங்கினார். மு.க.ஸ்டாலினும் நிலவேம்பு கஷாயத்தைக் குடித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிமுக அரசு இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியதாகும். தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் சுகாதாரத் துறை அமைச்சர் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
நிலவேம்புக் குடிநீர் குடிப்பதால், இந்தக் காய்ச்சலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தால், ஆங்காங்கு திமுக சார்பில் நிலவேம்பு குடிநீரும், கஷாயமும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.