விக்கிரவாண்டி, நான்குனேரியில் திமுக தோல்வி: மௌனம் கலைத்தார் ஸ்டாலின்

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்!வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்!வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளில் திமுக படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், “கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கூற்று ! அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில்; வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம்.

வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம்!

இந்த  இரண்டு இடைத்தேர்தல்களிலும், இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள் - அனைவருக்கும், தி.மு.க. தலைவர் என்ற அடிப்படையில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பு வீண்போகவில்லை; வீண்போகாது!

இதே காலகட்டத்தில் - மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்துள்ளது.

புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனாலும், மரியாதைக்குரிய எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது என்பது, உள்ளபடியே பாராட்டத்தக்கதாகும். அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற காமராஜர் நகர் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com