விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனும், நான்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட இந்த இரு தொகுதிகளில் கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்..
விக்கிரவாண்டி தொகுதி :
கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னரே விக்கிரவாண்டி தொகுதி உருவானது. அதற்கு முன்னதாக, இந்தத் தொகுதி கண்டமங்கலம் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது.
2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் புஷ்பராஜ் வெற்றி பெற்றார்.
2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ராதாமணி தோல்வியடைந்தார்.
2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர்.வேலுவை தோற்கடித்து, திமுக வேட்பாளர் ராதாமணி வெற்றி பெற்றார்.
நான்குநேரி தொகுதி:
2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி; அதிமுக வேட்பாளர் சூரியகுமார் தோல்வியுற்றார்.
2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை தோற்கடித்து, அதிமுக வேட்பாளர் நாராயணன் முதல் முறையாக வெற்றி பெற்றார்.
2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்: மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி, அதிமுக வேட்பாளர் விஜயகுமார் தோல்வி.
நான்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நான்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி காலமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு தொகுதிகளுக்கும் திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.