அமிர்தி வனஉயிரினப் பூங்காவுக்கு கடமான், நீர்ப்பறவை, கூழைக்கிடா ஆகியவை புதிதாக வந்துள்ளதால் அவற்றை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலூர் அருகே ஜவ்வாதுமலைச் சாரலில் அமைந்துள்ளது அமிர்தி வனஉயிரினப் பூங்கா. இங்கு மான், மயில், அரிய வகை பறவையினங்கள், குரங்குகள், நரி, முதலை, காட்டுப்பன்றிகள் போன்ற வனஉயிரினங்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த வன உயிரினங்களைக் காண தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், ரூ.1 கோடி மதிப்பில் அமிர்தி வனஉயிரின பூங்காவை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திட புதிதாக 6 கடமான்கள், தலா 4 நீர்ப்பறவை, கூழைக்கிடா ஆகிய வனஉயிரினங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த விலங்குகள் சென்னை கிண்டி தேசிய வனஉயிரினப் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, அமிர்தியில் உள்ள புள்ளிமான்கள் கூட்டத்துடன், புதிதாக வரப்பெற்றுள்ள இந்த கடமான்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
இதனிடையே, வரும் தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகைக்காக அமிர்தி வன உயிரின பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.