திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் வின்சென் , 26 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறை குழந்தையை மீட்க பல முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்தான் ஆனால் தற்போது 11 மணி நேரம் கடந்த நிலையில் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வினால் குழந்தை தற்போது 68 அடி ஆழத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.
குழந்தை சுஜித் வின்செனை மீட்க முதலில் மதுரை மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக கருவி பயன்படுத்தப்பட்டது ஆனால் இந்த கருவியால் குழந்தையை மீட்க முடியவில்லை பின் ஐஐடி குழுவினர் வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த கருவியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கருவிக்கு ஐஐடி அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த கருவியில் காமிரா, சுவாசிக்க ஆக்சிஜன், குழந்தையிடம் பேச மைக் போன்ற நவீன உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த கருவி குறிப்பிட்ட ஆழத்திற்குப் ஆழ்துளைக் கிணறு சிறியதாக இருப்பதால் செல்லவில்லை. எனவே இந்த கருவியில் அகலத்தை குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை வீரமணி குழுவினரின் உருவாக்கிய பிரத்யேக கருவியின் செயல் முறை குறித்து அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் விளக்கினர். பின் இந்த கருவியில் மூலம் குழந்தையை மீட்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வீரமணி குழுவினரின் குழந்தையை மீட்கும் பணியை தற்போது தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மணப்பாறைக்கு வர இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இவர்கள் காலை சுமார்6.30 மணி அளவில் மணப்பாறைக்கு வருவார்கள் என தெரிகிறது. இந்நிலையில் குழந்தை சுஜித் வின்செனுக்கு நல்ல நிலையில் சுவாசம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டும் வருகிறது.