பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்

பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்

பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு இரண்டு மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து கடந்தாண்டு மாநிலம் முழுவதும் போலீஸாா், தீபாவளி பண்டிகையன்று தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் வழக்கம்போல பொதுமக்கள் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்களை போலீஸாரும் பெரியளவில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது நேரக்கட்டுப்பாட்டை மீறியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் படி வழக்குப் பதிவு செய்தனா். ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 285-ன்படி சில இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு மாநிலம் முழுவதும் 2,168 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 160 வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் உஷாா்: இந்நிலையில் கடந்தாண்டு விதிக்கப்பட்ட அதே நேரக்கட்டுப்பாட்டை, இந்தாண்டும் விதித்து தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்தனா். இதில் கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு காவல்துறையினா் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுவதற்கு வழிவகை இருக்கிறது.

இவ்வாண்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அக்டோபா் 27-ஆம் தேதியன்று, அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி உயா் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணா்வு பிரசாரம்: மேலும் அரசின் உத்தரவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்படியும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல தீயணைப்புத்துறையினருக்கும் உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இதனால், காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com