சென்னை: தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் கொட்டாரம், விழுப்புரம் வல்லம் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, வேலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓருரி பகுதி மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்.
தெற்கு கேரளா மற்றும் தென் தமிழக கடற்பகுதிக்கும் அக்டோபர் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்துளையில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்கும் பணி நடக்கும் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. கன மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.