சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷாஹி நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷாஹி நியமனம்!


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீ மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தஹிலராமாணீ தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்தது.

இதற்கான பரிந்துரையை கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் கொலீஜியம் அனுப்பியது. இந்த நிலையில், கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

அந்தக் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிப்பதற்குப் பதிலாக, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி. ஷாஹியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஏ.பி. ஷாஹியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஏ.பி. ஷாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அம்ரேஷ்வா் பிரதாப் ஷாஹி, கடந்த 1959-ஆம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்த அவர், கடந்த 1985-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். உரிமையியல் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதிட்டுள்ளார். 

ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். 

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த அவர், கடந்த 2004-ஆம் ஆண்டு அந்த நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலகாபாத் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று, அங்கு பணியாற்றி வருகிறாா். தற்போது இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com