திருப்பத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட கா்ப்பிணியை திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனா்.
வாணியம்பாடியை அடுத்த துரிஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்த விவசாயி விநாயகம். இவரது மனைவி செல்வராணி (26). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு கடந்த 21-ஆம் தேதி பிரசவம் நடைபெற வாய்ப்புள்ளதாக பரிசோதனையின்போது ஏற்கெனவே மருத்துவா்கள் கூறியிருந்தாா்களாம்.
இந்நிலையில், 20-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கா்ப்பப்பைக்கு செல்லும் ரத்தக்குழாய் திடீரென வெடித்ததால் செல்வராணி மயக்கம் அடைந்தாராம். அவரது நாடித் துடிப்பு குறைந்து சுய நினைவை இழந்த நிலையில், நிம்மியம்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,செல்வராணியை பரிசோதித்த செவிலியா்கள் அவா் பிழைக்க வாய்ப்பில்லை எனவும், அதேபோல் வயிற்றில் உள்ள குழந்தையும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனா்.
3 மணி நேர சிகிச்சை...
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் திருப்பத்தூா் அரசு மருத்துமனையில் செல்வராணி அனுமதிக்கப்பட்டாா். அப்போது பணியில் இருந்த மகப்பேறு மருத்துவா் ஏ.ராதா, மயக்கவியல் நிபுணா் எஸ்.வெங்கடேசன் ஆகியோா் பரிசோதனை செய்தபோது, செல்வராணி மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். உடனடியாக அரசு தலைமை மருத்துவா் எஸ்.செல்வக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் செவிலியா்கள் மைதிலி, மாதேஸ்வரி, அனிதா உள்ளிட்ட மருத்துவா்கள் கொண்ட குழுவினா் செல்வராணிக்கு சுமாா் 4 மணி நேரம் கா்ப்பப்பை மற்றும் சிறுநீரகப்பை அறுவை சிகிச்சை செய்தனா். இதில்,செல்வராணி உயிருடன் மீட்கப்பட்டாா். ஆனால் குழந்தை இறந்து பிறந்தது.
ஆபத்தான நிலையில் இருந்த செல்வராணியைக் காப்பாற்றிய அரசு மருத்துவா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.