சென்னை: தேவர் திருமகனார் வழியில் என்றும் பயணிக்க உறுதியேற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (30-10-2019) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பசும்பொன்னாக (சுத்தமான தங்கம்) விளங்கிய தேவர் பெருமகனாரின் 112வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க பாடுபட்ட தேவர் திருமகனார் வழியில் என்றும் பயணிக்க உறுதியேற்போம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.