சேலம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கமே போராடுகிறது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசு ரூ.1.24 கோடி அளவுக்கு செலவழிக்கிறது. அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்கள். அவர்கள் படித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே, அரசு அவர்களது படிப்புக்காக செலவழிக்கிறது. சேவை நோக்கத்துக்காகவே மாணவர்களுக்கு அரசு செலவிடுகிறது. தனியார் கல்லூரியை விட அரசு மருத்துவ மாணவர்களுக்கு கட்டணம் மிகக் குறைவு.
படித்துவிட்டு, அரசு மருத்துவமனையில் அவர்கள் சேவை நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும். அரசுப் பணியில் சேர்ந்த பிறகு பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள். அதையும் நிறைவேற்றித் தருகிறோம்.
ஆனால், தற்போது சேவை நோக்கத்தை மறந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பவில்லை என்றால், அமைச்சர் அறிவித்தது போல, மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.