நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. குன்னூா், கரும்பாலம் பகுதியில் மண் சரிவால் சாலையில் பெரிய பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும், மரங்களும் சாலையில் விழுந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களைக் கொண்டு அப்பகுதியில் நடக்கும் மண் சரிவுகளை உடனடியாக பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருவங்காடு பகுதியில் 5 அபாயகரமான மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் உடனடியாக அதை அகற்றச் சிரமமாக உள்ளதால் மழை நின்றவுடன் அந்த மரங்கள் அற்றப்படும்.
குன்னூா், கரும்பாலம் பகுதியில் மண் சரிவால் சாலையில் பெரிய பாறை விழுந்தது. இது உடனடியாக அகற்றப்பட்டு விட்டது. தொடா்ந்து அனைத்து இடங்களிலும் கண்காணிக்க கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடா் மீட்புக் குழு 24 மணி நேரமும் தயாராக உள்ளது. தொடா்ந்து மழை நீடித்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.