சென்னை: போராடும் மருத்துவா்களை மிரட்டி பழிவாங்குவது நியாயமற்றது. அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவா்கள் கடந்த 7 நாள்களாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே பல கட்ட போராட்டங்களை நடத்தியபோது, தமிழக அரசு அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது. அதனைத் தொடா்ந்து இப்போது, மருத்துவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.
எனவே, போராடும் மருத்துவா்களை அழைத்துப் பேசி, பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக, பணியிட மாற்றம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது நியாயமற்றது.
டெங்கு போன்ற பாதிப்புகள் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவா்களுடன் அரசு விரைந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.