அரபிக் கடலில் உருவான மஹா புயலானது இன்று பிற்பகலில் தீவிரமடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், மஹா புயல் அரபிக் கடலில் உருவாகியிருப்பதாலும், அதன் நகர்வு திசை வடமேற்காக இருப்பதாலும், தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரபிக் கடலில் மகா புயலானது இன்று அக்டோபர் 31ம் தேதி காலை 8.30 மணிக்கு உருவானது. இது தற்போது லட்சத் தீவு அருகே நிலவுகிறது.
தற்போது இது அமலித் தீவுக்கு அருகே வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலவி வருகிறது.
இதுதொடர்ந்து இன்று மதியம் அளவில் தீவிரப் புயலாக மாறி லட்சத் தீவுகளைக் கடந்து வடமேற்கு திசையில் நகரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மஹா புயல் காரணமாக அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று அறிவித்துள்ளார்.
எனவே, மஹா புயல் காரணமாக தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிய வந்துள்ளது.