தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் தொலைபேசியின் வாயிலாகவும், நேரிலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், தமிழிசைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொலைபேசியின் வாயிலாக தமிழிசையை தொடர்பு கொண்டு பேசிய ஆளுநர், தெலங்கானா மாநில ஆளுநராக தாங்கள் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அம்மாநில மக்களுக்கு சேவையாற்றவிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். இந்தத் தகவலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
1999ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தமிழிசை நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார். ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, நேற்று அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.