சென்னை: தெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-இல் தமிழிசை பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து ஞாயிறன்று செய்தி வெளியானது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.
இந்நிலையில் தெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-இல் தமிழிசை பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா ஆளுநர் மாளிகை அதிகாரி வேதாந்தகிரி, செவ்வாயன்று சென்னையில் சந்தித்து நியமன ஆணையை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாகச் செயல்படுவேன். தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக நான் அங்கு செல்கிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
எடுத்துக் கொண்ட அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம், அதன்படி ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.