திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 43 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல், குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு இந்து முன்னணி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அக்கோயில் வளாகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு வட்டாட்சியர் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் எஸ். சங்கர்கணேஷ் தலைமையில், தடையை மீறி விநாயகர்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிலையை பறிமுதல் செய்யும் நோக்கில், காளியம்மன் கோயில் வளாகத்தில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் லட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின், விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினரை போலீஸார் வழிமறித்தனர். அனுமதியில்லாத இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது என அறிவுறுத்திய போலீஸார், அந்த சிலையை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதியின்றி சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்றதாக, இந்து முன்னணியினர் 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.