தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் திங்கள்கிழமை படப்பிடிப்பு முடிந்து திரும்பிய போது மலைச்சாலையில் கார் உருண்டு திரைப்பட கேமரா மேன் ஸ்டில் சிவா உயிரிழந்தார். இவருடன் வந்த நகைச்சுவை நடிகர் மாரிச்சாமி என்ற தவசி காயமடைந்தார்.
உத்தமபாளையம், கோம்பை, லோயர் கேம்ப் போன்ற பகுதிகளில் கடந்த ஒருவாரமாக தொலைக்காட்சி நாடகத்துக்காக படப்பிடிப்பு நடந்து வந்தது. அதன்படி, திங்கள்கிழமை காலையில் உத்தமபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கோம்பை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ரெங்கநாதர் கோயில் பகுதியில் மாலையில் படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்பு முடிந்து இரவு 8 மணிக்கு மலையடிவாரத்திலிருந்து ஒருகாரில், திரைப்பட கேமராமேன் ஸ்டில் சிவா மற்றும் நகைச்சுவை நடிகர் மாரிச்சாமி என்ற தவசி, உதவியாளர் என 3 பேர் வந்துள்ளனர். காரை தவசி ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, மலையடிவாரத்திலிருந்து கோம்பை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மலைச்சாலையில் உருண்டது. இவ்விபத்தில், கேமராமேன் ஸ்டில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச்சென்ற தவசி லேசான காயங்களுடன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் இருந்த உதவியாளர் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு சென்ற கோம்பை போலீஸார் விபத்தில் இறந்த சிவா சடலத்தை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.