தொண்டை அடைப்பான் நோயால் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதன்மூலம் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.செல்வி தெரிவித்தார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொற்றுக்கட்டுப்பாட்டுக் குழு, நுண்ணுயிரியல் துறை சார்பில் தொண்டை அடைப்பான் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ், சமூக மருத்துவத்துறை மருத்துவர் காயத்ரி, நுண்ணுயிரியல் துறை மருத்துவர் பாஸ்கர், குழந்தைகள் நலத்துறை மருத்துவர் தேரணிராஜன், பொது மருத்துவர் ஸ்ரீபிரியா, காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று தொண்டை அடைப்பான் நோய், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் ஆர்.செல்வி தலைமை வகித்து பேசியது:
தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், சளியின் மூலமாக தொற்றுகிறது.
உடனடியாக, சரியான சிகிச்சை அளிக்கத் தவறினால் இதய பாதிப்பு, உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம். இதனை முறையாகத் தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்க முடியும். நுரையீரல் தொற்று ஏற்பட்ட ஒருவர் வாய், மூக்கு ஆகியவற்றை மூடி இரும வேண்டும்.
அனைத்துத் தடுப்பூசி முறைகளையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலமாகவே பெருவாரியான தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என்றார் அவர்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் முகமதுகனி, குடியிருப்பு மருத்துவர் இன்பராஜ் உள்பட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.