ரஷியாவில் சித்திரவதைக்குள்ளான பொறியாளருக்கு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அருகே உள்ள கெருகம்பாக்கம் பிஐடி நகரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (23). பொறியாளரான இவர், சில மாதங்களுக்கு முன் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏற்கெனவே வேலை செய்து வரும் தமிழகம், கேரளம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்து செந்தாமரைக்கண்ணன் வேலை செய்து வந் துள்ளார். இந்நிலையில், அவரிடம் இருந்த ரூ.4 லட்சத்தை அங்கு தங்கியிருந்த சிலர் பறித்துக் கொண்டு செந்தாமரைக்கண்ணனை சித்திரவதை செய்தனராம். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து செந்தாமரைக்கண்ணன் சென்னைக்கு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக செந்தாமரைக்கண்ணன் தரப்பினர், சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.