அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 73 பாடப் பிரிவுகளில் 2,340 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதிகபட்சமாக ஆங்கிலப் பாடப் பிரிவில் 309 பணியிடங்களும், தமிழ் பாடப் பிரிவில் 231 பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. முதுநிலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி முடித்த 57 வயதுக்கு உள்பட்டவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் (செப். 4) வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.