வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 4) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிஸா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காணப்படுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து தென் மேற்கு திசை நோக்கி தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 4) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தென்மேற்குப் பருவக்காற்றின் சாதகமானப் போக்கு காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார்வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்குத் திசை நோக்கி மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.