தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
உரிய ஆதாரம் இன்றி மனுதாரர் முனிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்ததால் பொது நலன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக்கிற்கு குடிக்கச் செல்வோரைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஆவின் பால் விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஆவின் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பசும்பால் லிட்டருக்கு ரூ.4 -ம், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.6-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-லிருந்து ரூ.32 ஆகவும், எருமைப்பால் விலை ரூ.35 லிருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பால் விலை உயர்வு
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆவின் பாலைத்தான் வாங்குகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் பால் கிடைத்து வந்தது. இந்த நிலையில் பால் விலையை அரசு திடீரென உயர்த்தியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் லாபத்துக்காக அரசு நிதியை செலவு செய்யும் அரசியல்வாதிகள், அந்த நிதிச் சுமையை பொதுமக்கள் மீது சுமத்துகின்றனர்.
மேலும் படிக்க: கொதிக்கும் பால் விலை உயர்வு நாளை முதல் அமல்: விலை பட்டியல் இதோ...
தமிழக அரசின் இந்த முடிவால் மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பால் விலையை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.