கடந்த ஒரு சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த புதன்கிழமை காலை தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை கடந்து ஏழைகளின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது.
தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.41 குறைந்து ரூ.3,700க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600- க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.30 காசுகள் குறைந்து இன்று ரூ.52.50க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டதும் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
முன்னதாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பவுன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. ஆகஸ்ட் மாதம் ரூ.27 ஆயிரம், ரூ.28 ஆயிரம், ரூ.29 ஆயிரம், செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ரூ.30 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,700
1 பவுன் தங்கம் 29,600
1 கிராம் வெள்ளி 52.50