பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அருகே வணிக வளாகம் அமைப்பதற்கு தடை கோரிய வழக்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூரைச் சேர்ந்த பசுமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், விஜயநகர பேரரசால் கடந்த 16-ஆம் நூற்றாண்டில் வேலூர் கோட்டை, 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோட்டை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அகழியில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள நேதாஜி மார்க்கெட்டை இடித்துவிட்டு ரூ.219 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. எனவே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் வணிக வளாகம் கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ராமமூர்த்தி , தொல்லியல் துறையின் அனுமதி இல்லாமல் அந்த பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தொல்லியல் துறை, வேலூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.