வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (செப்.7) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (செப்.7) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் சனிக்கிழமை (செப்.7) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் கீழ்கோதையாற்றில் 90 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் தலா 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.