ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் ராஜினாமாதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனையா?: இ.கம்யூ., கேள்வி 

ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் ராஜினாமாதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் ராஜினாமாதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ.க. நூறு நாட்கள் சாதனை என கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாமல் மூடுவிழா நடத்திக் கொண்டுள்ளன. முன் எப்போதும் கண்டிராத வேலையின்மை நீடிப்பதுடன் தொழில்கள் மூடல் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஜம்மு-காஷ்மீரத்து மக்கள் திறந்த வெளிச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவைகளையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்து விட்டு பா.ஜ.க. நூறு நாள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர்.

டையூடாமன் செயலாளராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திரு.கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தனது அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை கண்டித்து, தான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்னாடகாவில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திரு.அண்ணாமலை ராஜினாமா செய்தார்.

தற்போது கர்னாடகா மாநிலத்தில் பணியாற்றி மக்கள் மத்தியில் சிறந்த அதிகாரி என போற்றப்பட்ட திரு.சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்துள்ளார்.

இதுவரை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக, தங்களின் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்துள்ளது சாதாரணமான ஒன்றாக கருத இயலாது.

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில், ஆசிரியர்களே, அதிகாரிகளே, வழக்கறிஞர்களே, நீதிபதிகளே ஆட்சிக்கு எதிராக தங்கள் பணிகளை கைவிட்டு வெளியேறுங்கள் என தேசப்பிதா மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று அன்று வெளியேறினர். இன்று எந்த அரசியல் கட்சி தலைவரும் அப்படிப்பட்ட அறைகூவலை விடுக்கவில்லை. ஆனால் அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனச்சாட்சிக்கு அடிபணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். மேலும் தொடரும் அபாயநிலை உள்ளது.

இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனை என்பதனை பா.ஜ.க. உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com