மோடி அறிவித்திருப்பதோ சாதனைகள்; நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகள்: காங்கிரஸ் கடும் தாக்கு 

மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல் என்று 100 நாட்கள் மோடி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் விமர்சனம் செய்த்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல் என்று 100 நாட்கள் மோடி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் விமர்சனம் செய்த்துள்ளது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் 2019 இல் அமைந்து நூறு நாட்களை கடந்த நிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் அடைந்திருக்கிறார். நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் மிகுந்த துணிச்சலோடு கூறியிருக்கிறார்.  கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது ஆட்சியின் சாதனைகளை கூறவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர் கூறுவதில் எள்ளின் முனை அளவாவது உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது ஒரு எதிர்கட்சியின் கடமையாகும். அப்படி ஆய்வு செய்கிற போது மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமுமே ஏற்படுகிறது.

உலக நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்;டதை நரேந்திர மோடியால் மறுக்க முடியுமா ? இதற்கு காரணம் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை என்பதை எவராலும் மறுக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை வளர்ந்துள்ளது. இதை தேசிய புள்ளி விவர ஆணையம் உறுதி செய்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வேகமாக திரும்ப எடுத்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் 99 பைசா சரிந்துள்ளது. மத்திய அரசு தனது ஒட்டுமொத்த செலவு மொத்த ஜி.டி.பி.யில் 14 சதவீதமாக இருந்ததை 12 சதவீதமாக குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறையை சரிகட்ட இதுவரை முன்மாதிரி இல்லாத வகையில் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பெற்றுள்ளது. பொதுத்துறை வங்கிகள் 27 ஆக இருந்ததை 12 ஆக குறைத்தது வாடிக்கையாளர்கள், பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் விவசாய வளர்ச்சி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த எந்த கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஆனால், நரேந்திர மோடி தமக்கு இருக்கிற சொற்பொழிவு ஆற்றலினால் முழுப்பூசணிக்காயை சோற்றில் மூடி மறைப்பதைப் போல வேதனைகளின் பட்டியலுக்கு பதிலாக  சாதனைகளின் பட்டியலை அறிவித்து வருகிறார். மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல். அதல பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் படுதோல்வியடைந்திருக்கிறார்கள். அந்த தோல்வியை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பா.ஜ.க.வினர் வெற்றி முடியாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com