சென்னை: தமிழக ஆளுனர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எத்தனை சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்டாலும் கூட, இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல.
29 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களை இனியும் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல். தமிழக ஆளுனர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.