339 பேருடன் மாயமான மலேசிய விமானம்: அறிவியல்பூர்வ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

கடந்த 2014-ஆம் ஆண்டு 339 பேருடன் கடலில் விழுந்து மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
339 பேருடன் மாயமான மலேசிய விமானம்: அறிவியல்பூர்வ விசாரணை கோரிய மனு தள்ளுபடி


கடந்த 2014-ஆம் ஆண்டு 339 பேருடன் கடலில் விழுந்து மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜூ குமார் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-ஆம் ஆண்டு நானும் எனது நண்பர்களும் திருவனந்தபுரம் அந்தோணியார் கோயில் அருகே உள்ள கடற்கரையில் அமர்ந்திருந்தோம். அப்போது விமானம் ஒன்று கடலில் விழுந்ததைப் பார்த்தோம். இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசிய போயிங் விமானம் 339 பேருடன் மாயமானதாக அடுத்தநாள் நாளிதழ்களில் செய்தி வெளியானது. 
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் தும்பாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) தகவல் தெரிவித்தோம். ரேடார் மூலம் ஆய்வு மேற்கொண்ட இஸ்ரோ அரபிக்கடலில் விமானம் விழுந்தது குறித்து சரிவர தெரியவில்லை என தெரிவித்துவிட்டது. இதனையடுத்து கேரள முதல்வர் மற்றும் மலேசியாவில் உள்ள மலேசிய விமான காவல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்தோம். இதனால் எந்த பலனும் இல்லை.  மேலும் சென்னையில் உள்ள மலேசிய தூதரகம், மத்திய அரசு, இஸ்ரோவுக்கும் பலமுறை மனு அளித்தோம். ஆனால் 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாயமான மலேசிய விமானம் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சம்பவம் கேரளத்தில் நடைபெற்றுள்ள நிலையில் எதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது என கேள்வி எழுப்பினர். அப்போது சென்னையில் மலேசிய தூதரகம் இருப்பதால் வழக்குத் தொடர்ந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை  ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com