வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.10) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியது:-
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றின் சாதகமான போக்கு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு உள்ளது. திங்கள்கிழமை மதுரையில் 105 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க் கிழமை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர் அதிகாரிகள்.