தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபை நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 13 நாள்கள் சுற்றுப்பயணத்தை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். முதல்வரின் இந்த பயணத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு முறை பயணம் முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணம் வெற்றியடைந்துள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். தமிழக சுற்றுலா துறையை மேம்படுத்துவது அவசியம் என்றார்.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளையும் ஈர்த்து, பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமிக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.