டெங்கு பாதிப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு

அண்மைக்காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு


அண்மைக்காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.
ஏற்கெனவே, அத்தகைய வார்டுகள் மருத்துவமனையில் செயல்பட்டு வந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் பலருக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இதையடுத்து, கொசுக்கள் மூலமாக பரவும் காய்ச்சல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நடுவே, மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்படடோருக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அந்த வகையான காய்ச்சல்கள் பரவுவதற்கான காரணிகள் குறித்து மருத்துவ மாணவர்கள் பொதுமக்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து,  மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் பரவும் காய்ச்சல்களுக்கு அரசு மருத்துவமனைகளில் விரிவான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை பெறுவதற்கான  வார்டு  தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்காக 100 படுக்கை வசதி கொண்ட இரண்டு வார்டுகள் உள்ளன.
டெங்கு பரிசோதனை மற்றும் ரத்தத் தட்டணுக்கள் பரிசோதனை ஆகியவை மருத்துவமனை ஆய்வகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சிகிச்சையளிக்கப்படுவதால், நோயாளிகள் விரைந்து குணமாகி வருகின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com