நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில்  நிலுவையில் உள்ள  ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களை விரைவில் தொடங்கவும்  ரயில்வே அதிகாரிகளிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 
நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்


சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில்  நிலுவையில் உள்ள  ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களை விரைவில் தொடங்கவும்  ரயில்வே அதிகாரிகளிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 
தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே  கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள், பயணிகள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து அந்தந்த தொகுதி நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். 
அதன்படி,  சென்னை பூங்கா நகரில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் சென்னை மற்றும் சேலம்  கோட்டங்களுக்கான எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) ராகுல் ஜெயின் தலைமை வகித்தார். சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ், சேலம் கோட்ட மேலாளர் யு.ஆர்.ராவ் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை  உறுப்பினர்கள்  டி.ஆர்.பாலு, சு.திருநாவுக்கரசர், மாநிலங்களவை  உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் தொகுதி வாரியாக ரயில்வே சார்ந்த திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அது தொடர்பான மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. நிலுவையில் உள்ள திட்டங்கள் மந்தமாக இருப்பதற்கான காரணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தங்கள் தொகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் பேசினர். 
இதையடுத்து,  டி.ஆர்.பாலு  அளித்த பேட்டி: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல ஆண்டுகளாக முடங்கியுள்ள ரயில் பணிகள் குறித்து வலியுறுத்தினேன். குறிப்பாக சென்னை-திருப்பதி சாலை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகே 4 வழி மேம்பாலம் அமைத்தல், தொகுதியில் மந்தமாக  நடைபெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அம்பத்தூர்-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை திட்டம், அம்பத்தூரை புறநகர் ரயில் சேவை மையமாக அறிவித்து, அங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல வழிவகை ஏற்படுத்துதல், சென்னை-மதுரை தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லவேண்டும்  உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன  என்றார் அவர்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): ரயில்வே தேர்வுகளை மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ரயில்வே பணிகளில் அந்தந்த மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். திருச்சியில் இருந்து சென்னைக்கு மலைக்கோட்டை விரைவு ரயிலைப் போல் இருமார்க்கமாக காலை நேரத்திலும் ஒரு ரயில் இயக்கவேண்டும். இதைப்போல் திருச்சியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்  உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றார்.
தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக): தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண்களுக்கு பாலூட்டும் அறை அமைத்துத் தரப்பட வேண்டும். நடைமேடைகளிலேயே டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டும். மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவற்றை  சீரமைக்க  வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் முன்வைத்த கருத்துகள் மற்றும் வலியுறுத்திய திட்டப்பணிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, மத்திய ரயில்வே வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com