முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சென்னையில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வந்த இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஷிவானி என்ற மகளும் இருந்தனர்.
இந்த நிலையில் செந்தில்குமாருக்கும், அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் செந்தில்குமார், முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த தனது மனைவி சரண்யாவை கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஏழுகிணறு காவல் துறையினர், செந்தில்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார்.