திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (புதன்கிழமை) கோவையில் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? அவர் பேசுவது முழுவதும் பொய்யான செய்தி. கடந்த 5 ஆண்டுகாலத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டால், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். பெரிய தொழில் தொடங்க 5 அல்லது 6 ஆண்டு காலம் தேவைப்படும். சிறிய தொழில் தொடங்க 2 அல்லது 3 ஆண்டு காலம் ஆகும்.
எனவே, எங்களை குறை சொல்வதுதான் அவரது நோக்கமே.
இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம், தமிழகத்தில் 8,835 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இஸ்ரேல் செல்வதைக் குறித்து உபரி நீரை சேமிக்க முடியவில்லை, இஸ்ரேல் செல்கிறாராம் என்று கிண்டல் செய்து ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவருடைய தந்தை கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அவர்கள் எத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ளார்கள்?
வளர்ச்சி குறித்து அறிய வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் திமுக" என்றார்.
இதையடுத்து, புதிய மோட்டார் வாகனச் சட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
"மத்திய அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். புதிய மோட்டார் வாகனச் சட்டம் மிக நல்ல சட்டம். சட்டத்தின் வாயிலாகத்தான் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
மேலும் படிக்க: வெளிநாட்டு தொழில் முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்து அறிக்கை விடுத்திருந்தார்.