வீட்டின் கழிவறையில் ரத்தத்தில் தன்னை யாரோ கடத்தியது போல எழுதிவிட்டு மாயமான மனைவி, தனது கணவரை போலீஸிடம் மாட்டிவிடவே அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் சின்னதிருப்பதி சந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (40), ஜவுளி வியாபாரம் மற்றும் ஜப்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (35), கடந்த ஆக. 27-ஆம் தேதி வீட்டின் அறையில் உள்ள சுவரில், "விமல் ஆள்கள் காப்பாத்துங்க ஹரி' என ரத்தத்தில் எழுதி வைத்துவிட்டு தனது இரண்டாவது மகளுடன் மாயமானார்.
இது குறித்து ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவரது மனைவி தமிழ்ச்செல்வியை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் உயிருடன் இருக்கிறாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் எல்லாம் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஹரிகிருஷ்ணனிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழ்ச்செல்வி தனது மகளுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே திங்கள்கிழமை மாலை கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி தனது மகளுடன் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து, கன்னங்குறிச்சி போலீஸார் தமிழ்ச்செல்வியை குற்றவியல் நடுவர் 1-ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். அங்கு நீதித்துறை நடுவர் செந்தில்குமார் விசாரணை நடத்தியதில், தன்னுடைய கணவர் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவரிடமிருந்து வெளியேறினேன்.
அவரை போலீஸில் மாட்டிவிட வேண்டும் என்பதால் இவ்வாறு திட்டமிட்டு நாடகமாடியதாக தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.