அதிமுக பேனர் விழுந்து பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்பு: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: அதிமுக நிர்வாகி ஒருவர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக அதிமுக நிர்வாகி ஒருவர் வரவேற்பு பேனர் வைத்திருந்தார். சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , விளம்பரப் பலகை சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஶ்ரீ அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு:
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.