காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்பர்அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை காவல்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பூக்கடை வடக்கு சரகத்தில் மட்டும், ஒரு உதவி ஆணையர், ஒரு காவல் ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர் பணியிடங்கள், சென்னையின் பிற இடங்களில் 791 பணியிடங்கள் காலியாக உள்ளன. என்ற தகவல்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. சென்னையில் மட்டுமே காவல்துறையில் இத்தனை காலிப்பணியிடங்கள் இருந்தால், மற்ற மாவட்டங்களில் நிலைமை மோசமாகத் தான் இருக்கும். பணிச் சுமையைக் குறைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் துறை சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் காவல் துறையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரி தமிழக உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.