: மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளுக்கான பதிவு உரிமம் கோரி மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாக மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு விண்ணப்பித்த மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளீனிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளீனிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம் பெற வேண்டியது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மே மாதம் வரை வழங்கப்பட்டது.
ஆனால், அந்த காலகட்டத்தில் 24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மட்டுமே புதிதாக பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, அதற்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, விண்ணப்பித்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்டந்தோறும் சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையைப் பொருத்தவரை அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட 48 புதிய மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம்; விண்ணப்பித்த அனைத்து மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் விரைவில் ஆய்வு நடத்தி உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.