சென்னை: பதாகைகள் இல்லாத விழாக்கள்தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பதாகைகள் தவிர்ப்போம்... நாகரிகம் காப்போம். பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு!
பா.ம.க. நிகழ்ச்சிகளில் பதாகைகள் - கட் அவுட்களுக்கு இடம் கிடையாது. தூத்துக்குடியில் பா.ம.க. நிகழ்ச்சிக்காக என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தான் விழாவில் பங்கேற்றேன். புதுவையில் எனது நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியதுடன், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பா.ம.க. நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.