பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைப்பதாக இருளப்பசாமி அறிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே பாசாங்கரை எனும் கிராமத்தில் வசித்து வருபவர் இருளப்பசாமி(71). சிவபக்தரான இவர் இன்று நள்ளிரவு ஜீவ சமாதி அடைய உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னதாகவே அறிவித்திருந்தார். இதற்காகக் கடந்த ஒரு மாதமாக உணவைத் தவிர்த்து, தண்ணீரை மட்டுமே பருகி வந்தார்.
இந்தத் தகவல் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவியதை அடுத்து ஏராளமான மக்கள் இருளப்பசாமியிடம் ஆசிப் பெற்று சென்றனர். இந்நிலையில் ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைப்பதாக இருளப்பசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நேரம் தவறியதால் தற்போது ஜீவ சமாதி அடைய முடியவில்லை. 2045-ல் அதே இடத்தில் ஜீவசமாதி ஆவேன், அது வரை தொடர்ந்து தவம் மேற்கொள்வேன் என்றார். இதன்மூலம் சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தில் விடிய விடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.