மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாயமான விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த மயில் சிலை மாயமானது. இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகள், தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை ஸ்தபதி முத்தையா தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூடுதல் ஆணையர் திருமகள் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதியளித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து விசாரணையை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.