வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் (செப்.13), திங்கள்கிழமையும் (செப். 16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியது: வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.13), திங்கள்கிழமை (செப். 16) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் 140 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 130 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 110 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 100 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 90 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுவில் தலா 80 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், ஈரோடு மாவட்டம் பவானி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா 70 மி.மீ. மழை வியாழக்கிழமை பதிவானது.