பரோலை நீட்டிக்கக் கோரிய நளினி மனு தள்ளுபடி

தனது பரோலை வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
பரோலை நீட்டிக்கக் கோரிய நளினி மனு தள்ளுபடி


தனது பரோலை வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறை விதிகளின்படி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் முடிந்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிறைக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் தனக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரி நளினி, தமிழக சிறைத்துறைக்கு கொடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. 
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தங்களது உறவினர்கள் பலர் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தான் வருகின்றனர்.
அவர்கள் வந்த பின்னர் தான் மாப்பிள்ளை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேச முடியுயம். எனவே, மேலும் 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியின் பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இலங்கையில் உள்ள தனது மாமியாரின் விசா பிரச்னையின் காரணமாக அவரால் உரிய நேரத்தில் தமிழகத்துக்கு வர முடியவில்லை. அவருடன் எனது மகளின் திருமணம் தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. அவர் விரைவில் தமிழகம் வரவுள்ளார். எனவே எனது பரோலை வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நளினியின் பரோலை நீட்டிக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு 30 நாள்கள் வழங்கப்பட்ட பரோல், மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் புதிதாக காரணங்களைக் கூறி, பரோலை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும் மகளின் திருமணத்தின் போதும் பரோல் கோருவார். இந்த விவகாரத்தில் சட்ட விதிகளுக்குட்பட்டே பரோல் வழங்க உத்தரவிட முடியும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். 
இதனையடுத்து நளினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com