மகாகவி பாரதியாரின் 98-வது நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ரோட்டரி சங்கம், பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில், பாரதி வேடமணிந்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 98 பேர் பாரதி - செல்லம்மாள் வேடமணிந்து பாரதி மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரதியின் தேசபக்தி பாடல்களை பாடினர்.
பிறகு, பாரதி மணிமண்டப வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, சிறார் திருமணத்தை தடுத்து நிறுத்துதல், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டி, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, பாரதியின் கீர்த்தனைகளைப் பாடியபடி பாரதியின் இல்லம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அங்கு பாரதியின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாரதியார் வேடமணிந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஷேக்சலீம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இளம் பாரதிகளின் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்துப் பேசினார்.